வாட்ஸ்ஆப், வைபர், ஸ்கைப், வீ சாட்: பொதுமக்களிடம் கருத்து கேட்கிறது 'டிராய்'...!

Puthiya Tholilnutpam
இணையதளம் மூலமான சேவைகளான வாட்ஸ்ஆப், வைபர், ஸ்கைப், வீ சாட் ஆகிய வற்றுக்கு எத்தகைய விதி முறைகளைக் கொண்டு வரலாம் என்பது தொடர்பாக பொது மக்களிடமிருந்து கருத்துகளைக் கேட்டுள்ளது தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்).
இணையதளத்துடன் கூடிய இத்தகைய சேவை நிறுவனங்களை ஓடிடி (ஓவர் தி டாப்) என்றழைக்கின்றனர். இந்நிறுவனங்களுக்கு எத்தகைய விதிமுறைகளும் இதுவரை வகுக்கப் படவில்லை. இணையதளம் மூலமான இந்த சேவைகளை இலவசமாக பொதுமக்கள் பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர். இதனால் குறுஞ்செய்தி அனுப்புவது குறைந்துள்ளது. இதனால் செல்போன் சேவை நிறுவனங்
களின் வருமானம் கணிசமாகக் குறைந்துள்ளது. மேலும் வைபர் போன்ற சேவையில் மறுமுனையில் உள்ளவருடன் தொலைபேசியில் பேச முடியும். இதனால் சர்வதேச அழைப்புகளின் மூலம் வரும் வருமானமும் குறைந்துள்ளது.
இதைக் கருத்தில் கொண்டு இத்தகைய சேவைகளுக்கு கட்டணம் வசூலிக்க அனுமதிக்க வேண்டும் என்று டிராயிடம் செல்போன் சேவை நிறுவனங்கள் வலியுறுத்தி வருகின்றன. ஆனால் அவ்விதம் வசூலிக்க அனுமதிக்க முடியாது என டிராய் தெளிவுபட தெரிவித்துவிட்டது.
இந்நிலையில் இவற்றுக்கு உரிய வழிகாட்டு நெறிகளை வகுக்க பொதுமக்களிடமிருந்து கருத்துகளை கேட்டுள்ளதாக டிராய் தலைவர் ராகுல் குல்லார் தெரிவித்தார். மக்களிடம் கருத்துகளைப் பெற்ற பிறகு தனது வழிகாட்டுதலை அரசுக்கு டிராய் தெரிவிக்கும். அதனடிப்படையில் விதிமுறைகள் வகுக்கப்படும்.
டெல்லியில் புதன்கிழமை அசோசேம் ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் பேசிய அவர், பிராட்பேண்ட் சேவையை விரிவுபடுத்தும் நடவடிக்கைகள் ஏமாற்றமளிப்பதாக அவர் குறிப்பிட்டார்.1.8 லட்சம் கி.மீ. தூரத்துக்கு கேபிள் போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் 15 ஆயிரம் கி.மீ. தூரத்துக்குத்தான் கேபிள்கள் போடப்பட்டுள்ளன என்றார்.
சர்வதேச அளவில் இணைய தளம் மூலம் இத்தகைய சேவைகளை வழங்கும் நிறுவனங்கள், சேவைகளுக்கு கட்டணம் விதிக்கக் கூடாது என்று குரல் எழுப்பியுள்ளன. இவ்விதம் விதிப்பது ஆன்லைன் சேவை பயன்பாட்டுக் கட்டணம் உயர்வுக்கு வழிவகுக்கும் என்றும் இது இணையதள சேவை அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்ற இலக்கை எட்டுவதற்கு முட்டுக் கட்டையாக அமைந்துவிடும் என்றும் தெரிவித் துள்ளது.

THANKS ; THE HINDU